3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, September 13, 2011

இஸ்லாம் என்றால் ! !


இஸ்லாம் என்றால் ! !


(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் 'ஹஜ்' அல்லது 'உம்ரா'ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: "அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்" என அவர்களது(நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, "ஆனால், அவர்கள் 'விதி' என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்" என்றேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறிவிடுங்கள்)".

பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயண அடையாளம் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் எவருக்கும் அவரை(யார் என)த் தெரியவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்துக் கொண்ட பிறகு, "முஹம்மதே! 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம் என்பது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் உங்களுக்குச் சென்று வர இயலுமெனில் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "உண்மை உரைத்தீர்கள்" என்றார். கேள்வியும் கேட்டுவிட்டு பதிலை உறுதியும் படுத்துகிறாரே என்று அவரைக் குறித்து நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், "ஈமான்(இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்" என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மை உரைத்தீர்கள்" என்றார்.

அடுத்து அவர், "இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

அவர், "எனக்குச் சொல்லுங்கள், யுக முடிவு எப்போது?" என்று மேலும் கேட்க, நபி(ஸல்) அவர்கள், "வினவுபவரைவிட வினவப் படுபவர் அறிந்தவர் அல்லர் என்று விடையளித்தார்கள். மேலும் அவர், "மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும் காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்திருந்த ஏழை ஆட்டு இடையர்கள், போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.

பிறகு அவர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி(ஸல்) அவர்கள், "உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், "அவர்தாம் (வானவர்)'ஜிப்ரீல்'. உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்தார்" என்றுச் சொன்னார்கள்".

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

குறிப்பு: நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தோரும் இந்த முதல் ஹதீஸில் இடம் பெற்றாலும் மூல நிகழ்வில் நேரடித் தொடர்புடையவரும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்ற நபித் தோழருமான உமர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதால் இதன் மூல அறிவிப்பாளரான உமர் (ரலி) அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் என இங்குக் குறிப்பிடப் படுகிறார்.

வாய்மையே வெல்லும் !


வாய்மையே வெல்லும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ

இஸ்லாம் 1400 வருட கால வரலாறுப் பயணத்தில் எழுச்சியையும் வளர்ச்சியையும் மட்டுமே கண்டு வருகிறது. தோல்வியும் வீழ்ச்சியும் இஸ்லாத்திற்கு முன் மண்டியிட்டது. தடைக் சுவறுகள் தவிடுபோடி ஆயின.
தனது கடவுள்? வாதத்தையும் ஆட்சி பீடத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இஸ்ரவேலர்களின் ஆண் இனத்தையே அழித்தான் ஃபிர்அவ்ன். ஆனால் அவனுடைய வீட்டிலேயே மூஸா (அலை) அவர்கள் செல்லப் பிள்ளையாக வளர்ந்த அர்ப்புத வரலாறுகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். (பார்க்க, அல்குர்ஆன் 28:1-14)
பயந்து, பயந்து முதியவர் ஒருவர் இஸ்லாத்தைப் போதித்தார். அரசவை குறி, ஜோஸியத்திற்காக தேர்ந்தெடுப்பட்ட சிறுவனை அவர் போதிக்கும் இஸ்லாம் கவர்ந்தது. இதை அறிந்த கொடுங்கோல் ஆட்சியாளன் அந்த முதியவரை சிறுவன் கண் எதிரே சாகடித்தான். அரசனுக்கும் சிறுவனுக்கும் கடும் போரட்டங்கள்! சிறுவனை கொலை செய்ய முடியாமல் அரசன் தவிக்கிறான். இறுதியில் அந்த சிறுவனின் ஆலோசனைப்படியே பொதுமக்களுக்கு மத்தியில் ‘இந்தச் சிறுவனின் இரட்சனின் பெயரால்’ என்று கூறி அம்பெய்து கொலைசெய்கிறான். சிறுவனை கொன்றுவிட்டோம்! என்று நிம்மதிப் பெரும் மூச்சி விடுவதற்கு முன்பே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ‘இந்த சிறுவனின் இரட்சகனாகி அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று இஸ்லாத்தை ஏற்றனர். பிரிந்தது ஒரு உயிர்தான்! ஆனால் அது ஒரு முஸ்லிம் சமுதாயத்தையே உருவாக்கிச் சென்றது. இவர்களின் தியாக வரலாறுகளைத்தான் ‘நெருப்புக் குன்ற வாசிகள்’ என அல்குர்ஆனின் 89வது அத்தியாயம் நினைவு கூறுகிறது. (பார்க்க, நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களை கொலை செய்யவந்த உமரை, நபிகளாரின் உயிர்காவலராக மாற்றியது இஸ்லாம்! நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பாசம் அண்ணலாரின் மரணித்த தகவலைக் கூட தாங்கிக் கொள்ளமுடியாத பலவீனராக்கியது! அங்கே இஸ்லாத்தின் வீரியத்திற்கு முன்னர் உமரின் வீரம் தோற்றது.
பத்ர் களத்தை விட்டும் வணிகக் கூட்டத்துடன் சாமர்த்தியமாக தப்பித்த, அபூசுப்யான் ‘பத்ருக்கு பழி தீர்ப்பதற்காக பல முறை படைதிரட்டி வந்தார். உஹது நடந்தது, அஹ்ஸாப் நடந்தது. ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தது.
மக்கா வெற்றியின் போது, குரைஷித் தலைவர்களே சரணடைய வருகிறார்கள், என்ற ஆதங்கத்தில் இதோ ஆயிது இப்னு அம்ரும் அபூசுஃப்யானும் வருகிறார்கள்! என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த வருகையை விட இஸ்லாம் மிக கண்ணியமிக்கது! இஸ்லாம் மேலோங்கும்! தாழாது! என்றார்கள்! (நூல்கள்: தாரகுத்னீ, புகாரீ)
மக்கா வெற்றியின்போது ‘அபூசுஃப்யானின் வீட்டில் நுழைந்தவருக்கும் அடைக்களம்!’ என்று அறிவித்து அபூசுஃப்யான் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சிறப்பிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)
அபூசுஃப்யான் (ரலி) அவர்களை முஸ்லிம் கண்டு கொள்ளவோ, அமருமாறு கூறுவதோ கிடையாது, இந்நிலையில், அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருந்து நீங்கள் மூன்றை ஏற்றுக் கொள்ளவேண்டும்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரி! ஏற்றுக் கொள்கிறேன் என்றார்கள். அரபு மக்களில் மிகவும் கவர்ச்சி மிக்க, அழகான என்னுடைய மகள் உம்மு ஹபீபாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்! என்றார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவதாக, என்னுடைய மகன் முஆவியாவை உங்களுடைய எழுத்தாளனாக நியமிக்கின்றேன்! என்றார்கள். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாவதாக, நான் முஸ்லிம்களை எதிர்த்து யுத்தம் செய்தது போன்று இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட என்னை படைத் தளபதியாக்க வேண்டும்! என்றார்கள். அதையும் நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வராக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுமைல் அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் -ரலி, நூல்: முஸ்லிம்)
மக்கா வெற்றியின்போது, அபூசுஃப்யானையும் அவர்களின் சஹாக்களான குரைஷிகளையும் பழிவாங்க வேண்டும் என முறையிட முனைந்தேன். ‘உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை! அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன் (அல்குர்ஆன் 12:92) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் அதிர்ச்சியால் மௌனமானேன் என்றார்கள் உமர் (ரலி).
சமூக வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு! எனவே நம்முடைய நடவடிக்கைகளை படிப்பினை தரும் வரலாறாக மாற்றவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை அதன் சேவகர்களாக மாற்றியமைத்த வரலாறு கண்டோம். வாய்மையான நடத்தைகளால் மனித உள்ளங்களை வெல்வோமாக!

எம். முஜீபுர்ரஹ்மான் உமரீ M.A.
வெளியீடு: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்

சகுனம் இல்லை நற்குறி உண்டு

சகுனம் இல்லை நற்குறி உண்டு.

எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1437. நபி (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5776 அனஸ் (ரலி).
1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).

1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).

1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


அடக்கம் செய்யப்படுகின்ற ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு உண்டு என்பதை எல்லோரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படியானால் தகனம் செய்யப்பட்டு (எரிக்கப்பட்டு) சாம்பலை கடலில் கரைத்து விடக் கூடிய ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு வேதனை இல்லையா? என்ற கேள்வியை பலரும் கேட்பதுண்டு.
அதுபோல் கடலில் அல்லது ஆற்றில் மூழ்கி மீன்களுக்கு இரையாகிப் போன மையத்துகளுக்கும் குண்டு வெடிப்பில் சிதைந்து போன மையத்துக்ளுக்கும் இது போன்ற நிலையில் உள்ள மையத்துக்களுக்கும் கேள்வி கணக்கு உண்டா? வேதனை உண்டா? என்றும் கேட்கின்றனர். அல்லாஹ்வின் வல்லமையை தெரிந்து கொண்டால் இதற்கான பதிலும் கிடைத்துவிடும்.
அல்லாஹ் மனிதனை (படைப்பினங்களை) படைக்கும்போது எந்த முன்மாதிரியுமின்றி அவன் நினைத்த மாதிரி படைத்தான். ஒரு துளி நீரிலிருந்துதான் மனிதனை படைத்தான். அல்லாஹ் ஏதாவது ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகுக’ என்று கூறிவிடுவான். அது உடனே (ஒரு படைப்பாக) ஆகிவிடும். இப்படியான வல்லமை படைத்த அல்லாஹ்வுக்கு, தகனம் செய்யப்பட்ட கருகி சாம்பலாகிப் போன சிதைந்துப் போன உடல்களை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாதா? கேள்வி கேட்க முடியாதா? ஆற்றலும் வல்லமையுமுள்ள அல்லாஹ்வுக்கு இது மிகவும் இலகுவான காரியம். பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஹதீஸையும் நிதானமாக படியுங்கள். சந்தேகத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும்.
“மனிதனை (ஒரு துளி) விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில் லையா? (இப்போது) அவனோ நம்மை மறு த்து) பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.
அவன் நமக்கு (ஒரு) உதாரணம் காட்டுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.
“முதல் தடவை இதை யார் படைத்தா னோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று நபியே நீர் கூறுவீராக. (36:77-79)
நபி (ஸல்) அவர்கள் முன்சென்ற அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தையையும் வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர். அவர் தமக்காக எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை.
அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். ஆகவே (அவர் தம் மக்களிடம்) நன்றாக கவனியுங்கள். நான் இறந்து விட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். (தகனம் செய்து விடுங்கள்) நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் பொடிப் பொடியாக்கிவிடுங்கள். அல்லது துகள் துகளாக்கி விடுங்கள். பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவி விடுங்கள் என்று கூறி தாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் உறுதி மொழியும் வாங்கிக் கொண்டான்.
என் இறைவன் மீதாணையாக! அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ், (தூவி விடப்பட்ட சாம்பலை) ஒன்று சேர்த்து மனிதனாக) ஆகிவிடு என்று கூறினான். உடனே அவர் மனிதராக (உயிர் பெற்று) எழுந்து நின்றார். அவரிடம் அல்லாஹ் என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது என்று பதிலளித்தார். ஆகவே அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். அருள் புரிந்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) ஹுபைதா (ரலி) நூல்: புகாரி (3478, 3479, 3481, 6480, 6481)

அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது


ஸஹீஹுல் புகாரி:4340.

அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம் (கட்டளையிட்டார்கள்)" என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், 'நெருப்பு மூட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்" என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்" என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்" என்று கூறினார்கள். 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புஹாரி 7144. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
 

(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
Volume :7 Book :93

அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா? பிரேதப் பரிசோதனை செய்யலாமா? பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?

அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


மருத்துவப் பரிசோதனை கருதி அடக்கம் செய்யப்பட்ட உடலை (மையத்தை) வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறான நிர்ப்ந்தமான சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கு தடையேதும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

(முனாபிக்குகளின் தலைவரான) அப்துல்லாஹ் இப்னு உபையின் உடல் கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் அ(ந்த மையத்)தை வெளியில் எடுக்குமாறு கூறினார்கள். வெளியில் எடுக்கப்பட்டதும் அதை தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ் நீரை உமிழ்ந்து தமது மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி (1350)

(‘உஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட) எனது தந்தையுடன் இன்னொருவர் (ஒரே குழியில்) அடக்கம் செய்யப்பட்டார். ஆயினும் எனது மனம் அதை விரும்பில்லை. எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்ரில் அடக்கம் செய்தேன். அப்போது அன்றுதான் அடக்கம் செய்யப்பட்டவர் போல அவரது உடல் (பாதிப்பில்லாமல்) இருந்தது. காதைத் தவிர (காது பழுதுபட்டிருந்தது) என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (1351,1352)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.
இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காக மையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.
பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.
இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன.
நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.

பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி


மையத்தை குளிப்பாட்டுவது அதனது அசுத்தங்களை நீக்கி சுத்தப் படுத்துவதற்காகத்தான். ஆனால், பிரேதப் பரிசோதனைக்கு உட்பட்ட மையத்தை குளிப்பாட்டும்போது மேலும் அசுத்தங்கள் ஏற்படுவதற்கோ, இரத்தங்கள் வடிந்து ஓடுவதற்கோ வாய்ப்புண்டு. அதன் காரணமாக கபன் ஆடை கூட அசுத்தமாகி விடலாம். எனவே இப்படியான சந்தர்ப்பத்தில் அந்த மையத்தை குளிப்பாட்டுவதற்கு பதிலாக தயம்மும் செய்துவிடுவதே சிறந்த செயலாக இருக்கும்.
உயிரோடு இருக்கும்போது குளிக்க முடியாத அளவுக்கு காயம் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. அதுபோல் இறந்த உடலும் (மையத்தும்) குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் தயம்மும் செய்து கொள்வதே சிறந்த வழிமுறையாகும்.
இதுபோல் விபத்தில் இறந்தவர்கள், உடல் சிதைந்து இறந்தவர்கள் தீயில் கருகி இறந்தவர்கள், ஆகியோர்களது உடல்களை பிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்போது குளிப்பாட்டாமலோ தயம்மும் செய்யாமலோ விட்டுவிட வேண்டியிருக்கும். சிலநேரம் மையத்துக்களை அரசாங்கம் “சீல் குத்தி” தரும். அந்த மையத்தை யாரும் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது மாதிரியான சூழ்நிலையில் குளிப்பாட்டாமலும் தயம்மும் செய்யாமலும் விடுவதால் குற்றமாகாது.
“உங்களுக்கு நான் ஒரு கட்டளையிட்டிருந்தால் அதனை உங்களால் முடிந்தவரைச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக் கேற்ப நம்மால் முடியாத காரியத்தில் இவ்வாறு செய்வதால் அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான்.

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

அசலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே...

மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!
பித்அத்துக்கள், அதைச் செய்வோரை நரகத்தை நோக்கியே இழுத்துச் செல்லும். மார்க்கத்தின் பெயரால் உருவான இத்தகைய ஆபத்தான பித்அத்துக்கள் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூண்றியுள்ளன. இவை வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டியவை ஆகும்.
பித்அத்துக்களைக் களைய வேண்டுமென்றால், பித்அத்துக்கள் தோன்றி வளர்ந்து வருவதற்கான காரணங்களையும் கண்டறிந்து களைவது கட்டாயமாகும்.
இந்த அடிப்படையில் பித்அத் துக்கள் தோன்றி வளர்ந்து வருவதற்கான காரணங்கள் எவையென்பது இங்கே ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்படுகின்றது.
-1- அறியாமை:
“அறியாமை” ஆபத்தான அம்சமாகும். பல தீமைகளை அறியாமை நன்மைகளாகக் காட்டி விடுகின்றது. அறிவீனர்களை ஆலிம்களாக்கி விடுகின்றது.
ஆலிம்களாக இனங்காணப்பட்ட அறிவீனர்களின் ஆதாரமற்ற உளறல்கள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட ‘ஃபத்வா”க்கள் ஆகிவிடுகின்றன.
“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (17:36)
தனக்கு அறிவற்ற விடயங்கள் குறித்துப் பேசுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இன்று சாதாரண மார்க்க ஈடுபாடு ஏற்பட்டு விட்டால் அவர்களெல்லாம் ‘ஃபத்வா”க் கொடுக்கும் “முஃப்தி”களாகி விடுகின்றார்கள்.
நிச்சயமாக அல்லாஹ்தஆலா கல்வியை மக்களிடமிருந்து ஒரேயடியாகப் பிடுங்கி எடுத்து விட மாட்டான். எனினும், உலமாக்களைக் கைப்பற்றுவான். அவர்களுடன் மார்க்க அறிவும் உயர்த்தப்படும். அதன் பின் மனிதர்கள் மத்தியில் அறிவீனமான தலைவர்கள்தான் மிஞ்சுவார்கள். அவர்கள் (மார்க்க) அறிவில்லாமல் ஃபத்வா வழங்கித் தாமும் வழிகெடுவதுடன், பிறரையும் வழிகெடுத்து விடுவார்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூற, தான் செவியுற்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 7307, முஸ்லிம் 2673)
இந்த நிலையை இன்றைய இஸ்லாமிய அமைப்புகள் பலவற்றிலும் நாம் காணக் கூடியதாக உள்ளது. மார்க்கத்தைக் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் கற்றறிந்த உலமாக்களை விட 3 நாள், 40 நாள் ஜமாஅத்தில் சென்றவர்கள் அல்லது 4 மாநாடுகளில் கலந்து கொண்டு, 10-11 (CD) இறுவட்டுகளைக் கேட்டவர்களெல்லாம் தலைவர்களாகவும், மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்களாகவும், மார்க்கத்தின் பெயரில் மார்க்கத்தில் இல்லாதவற்றையும், மார்க்கத்தில் இருப்பவற்றைக் கூட்டிக் குறைத்தும், திரித்தும் தீர்ப்பு வழங்கி விடுகின்றனர். இதனால் அவர்களும் வழிகெடுகின்றனர்; பிறரையும் மார்க்கத்தின் பெயராலேயே வழிகெடுத்து விடுகின்றனர்.
அறிவீனர்களைத் தலைவர்களாக எடுத்துக்கொள்ளும் விடயத்தில் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். பொது மக்கள் மட்டுமன்றி, உலமாக்கள் கூடத் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் ஆதாரங்களை அறிந்து, அலசி ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லும் பக்குவத்தைப் பெறவேண்டும்.
இல்லாத போது பித்அத்தை ஒழிக்க முடியாது! ஒரு பித்அத்திலிருந்து விடுபட்டு, இன்னுமொரு பித்அத்தில் விழும் நிலைதான் தொடர்ந்துகொண்டிருக்கும்.
-2- மனோ இச்சைகளைப் பின்பற்றுதல்:
மனம் விரும்புவதை மார்க்கமாகவும், மார்க்கச் சட்டமாகவும் எடுத்துக்கொள்வது பித்அத் தோன்றவும், வளரவும் வாய்ப்பை உண்டாக்கியுள்ளது. இத்தகையவர்களுக்கு எத்தனை ஆதாரத்தைக் காட்டினாலும், அவர்களது மனம் அதை ஏற்றுக்கொள்ளாததால் ஆதாரத்திற்குக் கட்டுப்பட மாட்டார்கள். இத்தகையவர்கள் பித்அத்தை விட்டும் கழன்று வர மாட்டார்கள்.
மனோ இச்சைக்குக் கட்டுப்படும் இத்தகையவர்கள் சில போது நடைமுறை ரீதியான பித்அத்துக்களை விட்டு விலகினாலும், கொள்கை ரீதியான பித்அத்துக்களை விட்டும் இவர்கள் விலக முடியாதவாறு இவர்களது மனோ இச்சை இவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டேயிருக்கும். இத்தகையவர்கள் ஆதாரபூர்வமான ஸுன்னாவையோ, அல்குர்ஆனையோ வழிகாட்டிகளாக வாயால் ஏற்றிருந்தாலும் உள்ளத்தால் தமது மனோ இச்சையையே வழிகாட்டியாக ஏற்றிருப்பர். இது இழிவான நிலையாகும்.
இவர்களது மனம் “சரி!” என்று சொல்வது இவர்களுக்குச் சரி. அது ஸுன்னாவுக்கு முரணாக இருந்தாலும் சரியே!
இவர்களது மனம் “பிழை!” என்று சொல்வது இவர்களுக்குப் பிழையானதே. அது ஸுன்னாவுக்கு உடன்பாடாக இருந்தாலும் சரிதான்!
இந்த மனோ நிலையிலிருப்பவர்கள் ஆதாரங்களை விடத் தமது மனோ இச்சைக்கே முன்னுரிமை அளிப்பர். இது விடயத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவுள்ளோரும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் போது வழிகேட்டில் விழ வாய்ப்புள்ளது. ஒருவரின் அறிவு மட்டும் அவர் போகும் வழி சரி என்பதற்கு ஆதாரமாக அமைந்து விடாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
“(நபியே!) தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா? நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். மேலும், அவனது செவிப் புலனிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தினான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார்? நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?” (45:23)
மேற்படி வசனத்திலுள்ள அறிவு உள்ள, ஆனால் செவியிலும், விழியிலும், உள்ளத்திலும் சீல் குத்தப்பட்டவன் வழிகேட்டில் சென்று விடுவானென்ற அம்சம் அவதானிக்கத் தக்கதாகும்.
நல்ல மனிதர் கூட மனோ இச்சையைப் பின்பற்றி அல்லது தனது கோபம், பொறாமை, பழி வாங்கல், மட்டந்தட்டல், கர்வம் போன்ற தனது உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டுத் தீர்ப்பு வழங்கும் போது தவறி விடுவான்.
“தாவூதே! நிச்சயமாக உம்மை நாம் பூமியில் அதிகாரத் துக்குரியவராக ஆக்கினோம். எனவே, மனிதர்களுக் கிடையில் நீதியாகத் தீர்ப்பு வழங்குவீராக! மேலும், நீர் மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம்! அவ்வாறெனில், அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழி தவறச் செய்து விடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி தவறுகின்றனரோ, அவர்கள் விசாரணைக்குரிய நாளை மறந்ததன் காரணமாக அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.” (38:26)
மேற்படி வசனத்தில், தாவூத் நபியைப் பார்த்து “மனோ இச்சைக்குக் கட்டுப்படாதீர்! அப்படிக் கட்டுப்பட்டால் நீரும் வழிகெட்டு விடுவீர்!” எனக் கூறப்படுவதை அவதானித்தால் மனோ இச்சைக்குக் கட்டுப்படுபவன் எவ்வளவு பெரிய ஆலிமாக இருந்தாலும் வழிகெட்டு விடுவான் என்பதை அறியலாம்.
“அவர்கள் உமக்குப் பதிலளிக்க வில்லையென்றால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்துகொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து எவ்வித வழிகாட்டலுமின்றித் தனது மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களான கூட்டத் தினரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (28:50)
ஆதாரம் இல்லாமல் மனோ இச்சையைப் பின்பற்றுபவன் மிகப் பெரிய வழிகேடன் எனக் கூறப்படுவதால், இது விடயத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து பித்அத்தை ஒழிக்க முயல வேண்டும்.
-3- சந்தேகத்திற்குரியவற்றைப் பின்பற்றுதல்:
அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஸுன்னாவும் சந்தேகத்திற்கப்பாற்பட்டதாகும். அதே வேளை, குர்ஆனில் நேரடியாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ள விடயங்களை விட்டு விட்டு, பல கருத்துகளுக்கு இடம் பாடுள்ள முதஷாபிஹாத்தான விடயங் களைத் தப்பும், தவறுமாக விளங்கிப் பின்பற்றுவதும் பித்அத்தில் விழ வைக்கும்.
“அவன்தான் உம்மீது இவ்வே தத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) “முஹ்கமாத்” வச னங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத் தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) “முதஷாபி ஹாத்”களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை நாடியும், இதன் (தவறான) விளக்கத்தைத் தேடியும் அதில் பல கருத்துக்களுக்கு இடம்பாடானவற்றைப் பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார் கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ, “நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிட மிருந்துள்ளவையே!” என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.” (3:7)
உள்ளத்தில் நோய் உள்ளவர்கள் சந்தேகத்திற்குரியவற்றையும், பல அர்த்தங்களுக்கு இடம்பாடான வசனங்களையும் பின்பற்றி பித்அத்துகளை உருவாக்குகின்றனர்.
“யகீன்” என்ற சொல்லுக்கு மரணம் என்ற அர்த்தமும் உள்ளது;
“(மரணம் எனும்) உறுதி எமக்கு வரும் வரை நாம் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக்கொண்டு மிருந்தோம்” (எனக் கூறுவார்கள்.)” (74:46-47).
உறுதி என்ற அர்த்தமும் உள்ளது.
“அவ்வாறன்று, மிக நன்றாக நீங்கள் அறிவீர்களாயின் (உங்களை அது பராக்காக்கியிருக்காது) நிச்சயமாக, நீங்கள் நரகத் தைக் காண்பீர்கள்.” (102:5-6)
உள்ளத்தில் நோயுள்ளவர்கள் தெளிவான குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸ்களையும் உதறித் தள்ளி விட்டு, “யகீன் வரும் வரை உமது இறைவனுக்கு இபாதத் செய்!” என்ற வசனத்திற்கு உறுதி வரும் வரைதான் இபாதத் செய்ய வேண்டும். உறுதி வந்த பின்னர் இபாதத் தேவையில்லை எனக் கூறி தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
நோன்பு என்றால் உண்ணவோ, பருகவோ கூடாதென்பது தெளிவாக இருக்கும் போது, மரியம்(அலை) அவர்களின் மௌனவிரதம் சம்பந்தப்பட்ட (19:26-33) வசனங்களை வைத்து உண்டுகொண்டும், பருகிக்கொண்டும் நோன்பிருக்கலாம் என்கின்றனர்.
“உண்மையான முஃமின்களிடம் அல்லாஹ் நினைவூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கிவிடும்” என்ற வசனத்தை வைத்துக் கொண்டு ஆடி-அசைந்து கொண்டு “திக்ர்” என்ற பெயரில் கூத்தையுண்டாக்கினர். இவர்கள் தெளிவான சான்றுகளை விட்டு விட்டு, குழப்பும் நோக்கத்தில் தப்பான அர்த்தங்களைக் கூறி வழிதவறிச் செல்லும் கூட்டத்தினராவர்.
குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ் களுக்கும் அவை கூற வராத புதிய கருத்துகளைக் கூறி, குர்ஆன்-ஸுன்னாவின் கருத்தைத் திரிபுபடுத்துவது மிகப் பெரிய வழிகேடாகும். இந்த வழிகேடுதான் இன்று வரை புதிய புதிய பித்அத்தான கொள்கைகளையும், கூட்டங்களையும் உருவாக்கி வருகின்றது.
-4- பகுத்தறிவில் தங்கி நிற்பது:
குர்ஆன்-ஸுன்னாவை விட்டு விட்டு, பகுத்தறிவில் தங்கி நிற்பதும் பித்அத் தோன்ற வழிவகுக்கின்றது.

கூட்டு துஆ நல்லது தானே?
மவ்லிது நல்லது தானே? என்று எல்லா வகையான பித்அத்துகளையும் ஆதாரங்களைப் பார்க்காது, வெறும் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சரிகண்டு விடுகின்றனர்.
இது வழிகேட்டுக்கு வழிவகுக்கின்றது; வழிகேடுகளை வளர்க்கின்றது.
“..இத்தூதர் உங்களுக்கு எதை வழங்கினாரோ, அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ, (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.” (59:7)
ரசூல் தந்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். ரசூல் தந்ததை மறுப்பது வழிகேடு. தராததை நாமாக உருவாக்குவதும் வழிகேடாகும்.
“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்றுவிட்டான்.” (33:36)
எனவே, இந்த வழிகேட்டை ஒழித்தால்தான் பித்அத்தை ஒழிக்க முடியும்.
-5- தக்லீதும், இயக்கஃதனிநபர் வழிபாடும்:
சிலர் சில இமாம்கள் மீதும், தனிநபர்கள் மீதும் அளவுக்கு மீறிய பற்று வைத்து, அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதென்ற தக்லீத் (கண்மூடிப் பின்பற்றும்) இயல்பில் இருக்கின்றனர். சிலர் சில இயக்கங்கள் மீது தக்லீத் பற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த இயக்கம் சொன்னால் நாம் சரி காண்போம் என்பது இவர்களது நிலை!
மற்றும் சிலர், “இந்த மத்ஹப் சொன்னால் ஏற்போம்! இல்லையென்றால் மறுப்போம்!” என்ற மனநிலையில் உள்ளனர். மற்றும் சிலர் மத்ஹபு மாயையிலிருந்து விடுபட்டு, அதை விட மோசமான தனிநபர் வழிபாட்டில் வீழ்ந்துள்ளனர்.
இவையனைத்தும் பித்அத்துக்களை வளர்க்கும் அம்சங்களாகவே திகழ்கின்றன.
“அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? மேலும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கூறுவார்கள். மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” என்று கூறுவர். “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கு வழங்குவாயாக! இன்னும் அவர்களை நீ பெருமளவில் சபிப்பாயாக!” (என்றும் கூறுவர்.)” (33:66-68)
முதலில் இந்த மாயைகள் அனைத்திலிருந்தும் நாம் விடுபட வேண்டும். ஒன்றிலிருந்து தப்பி, மற்றதில் விழுந்தால் கூட நரகிலிருந்து எங்களால் தப்ப முடியாது.
மற்றும் சிலர், “எமது மூதாதையர்கள் செய்தவற்றை நாம் விட மாட்டோம்!” என முரட்டுத்தனமாக விடாப்பிடியாக நிற்கின்றனர். இந்தச் சிந்தனையும் பித்அத் வளரக் காரணமாகி விடுகின்றது. ஆரம்ப கால இறைத் தூதர்கள் அனைவரது சத்திய அழைப்பும் இந்தப் போலிச் சாட்டுச் சொல்லைப் பயன்படுத்தித்தான் நிராகரிக்கப்பட்டது.
“அவ்வாறன்று, “நிச்சயமாக நாம் எமது மூதாதையர்களை ஒரு வழியில் இருக்கக் கண்டோம். நிச்சயமாக நாம் அவர்களது அடிச்சுவடுகளில்; செல் பவர்களே!” என்றும் கூறுகின்றனர்.” (43:22)
“அவர்களிடம் “அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள்!” என்று கூறப்பட்டால், “இல்லை! நாம் நமது மூதாதையர்கள் எதில் இருக்கக் கண்டோமோ, அதையே பின்பற்றுவோம்!” எனக் கூறு கின்றனர். அவர்களின் மூதாதையர்கள் எதையும் விளங்கிக் கொள்ளாதவர்களாகவும், நேர்வழி பெறாத வர்களாகவும் இருந்தாலுமா (பின் பற்றுவார்கள்)?” (2:170)
எனவே, தவறான மூதாதையர் பற்றிலிருந்து விடுபட வேண்டும்.
இதே வேளை, பித்அத் செய்வோர் தமது செயலை அழகாகக் காண்கின்றனர். மவ்லீது-மீலாது நிகழ்ச்சிகள் எவ்வளவு அழகானவை? அன்னதானம் வழங்குவது எவ்வளவு நல்ல செயல்? என்றெல்லாம் தமது பித்அத்துகளை அழகாகக் காண ஆரம்பித்து விடுகின்றனர்.
“யாருக்கு அவனது தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டு, அவனும் அதனை அழகானதாகக் கண்டானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போன்றவனா?) நிச்சயமாக அல்லாஹ், தான் நாடு வோரை வழிகேட்டில் விட்டு விடுகின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே, (நபியே!) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய் விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன் கறிந்தவன்.” (35:8)
என்ற வசனம் கவனத்திற்கொள்ளத் தக்கதாகும். இத்தகையவர்கள் நன்மை செய்கின்றோம் என்ற எண்ணத்தில் பித்அத்துகளைச் செய்து நாளை மறுமையில் நஷ்டமடைந்து விடுவார்கள்.
இந்த நிலை எம்மில் எவருக்கும் ஏற்படக் கூடாதென்றால் தனிநபர் வழிபாடு, இயக்க வெறி, போலி மூதாதையர் பற்று என்பவற்றைக் களைந்து தூய்மையான முறையில் குர்ஆன்-ஸுன்னாவை அணுக முற்பட வேண்டும்.
-6- பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாகக்கொள்வது:
ஹதீஸ் கலை அறிஞர்கள் சில ஹதீஸ்களைப் “பலவீனமானவை” எனறும், மற்றும் சிலவற்றை “இட்டுக்கட்டப்பட்டவை” என்றும் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஆய்வு செய்து அடையாளப் படுத்தியுள்ளனர். அவர்களது தியாகங்கள் அனைத்தையும் காலுக்குக் கீழ் போட்டு மிதிக்கும் விதத்தில் இன்றைய அறிஞர்கள் சிலர் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி மிம்பர்களில் கூறுகின்றனர்.
ஸஹீஹான உண்மையான ஹதீஸ்களையும், போலி ஹதீஸ்களையும் ஒன்றுடன் மற்றதைக் கலக்கின்றனர். மற்றும் சிலர், தமது போலியான ஹதீஸுக்கு முரண்படும் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிக்கவும் தயங்குவதில்லை.
அல்லாஹ்வின் தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட போலி ஹதீஸ்களை அடிப்படை யாகக் கொண்டு செயற்படும் போது பித்அத்துகள் உண்டாகின்றன.
மற்றும் சிலர், பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு செயற்படலாம் என்ற தவறான கருத்தால் பித்அத்துகளை உண்டாக்கி வருகின்றனர்.
இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் பித்அத்துகள் தோன்றவும், வளரவும் வழி வகுத்துள்ளன. எனவே, நாம் ஸஹீஹான ஹதீஸ்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
போலி ஹதீஸ்கள் புறக் கணிக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பித்அத்து களை ஒழிப்பதென்பது சாத்தியமற்றதாகி விடும்.
-7- அந்நியருக்கு ஒப்பாக நடத்தலும், அவர்களைப் பின்பற்றுதலும்:
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு ஏவப்பட்ட முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போன்று செய்கின்றனர். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். இதுவும் பித்அத் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகின்றது.
கிறிஸ்தவச் சகோதரர்கள் இயேசு பிறந்த தினத்தைக் “கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதைப் பார்த்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடாது இருக்கலாமா? எனச் சிந்தித்து “மீலாது-மவ்லித் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க நடைமுறைகளில் தென்னிந்திய முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாகும்.
தென்னிந்திய முஸ்லிம்கள் இந்து சமூகத்தின் மார்க்க நடைமுறைகளை அவதானித்தனர். பொழுது போக்கிற்காகவும், கலை ஆர்வத்திலும் அவர்கள் செய்த அனைத்தும் இவர்களும் சில அறபுப் பெயர்களைச் சூட்டிச் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்தனர்.
அவற்றுக்கு இஸ்லாமிய சாயமும் பூசினர். முஸ்லிம்கள் கோயில்களுக்கும், இந்து மத வழிபாடு நடக்கும் இடங்களுக்குச் சென்று விடாமலிருப்பதற்காக இவற்றை உருவாக்கியதாகக் காரணமும் கூறிக் கொண்டனர்.
ஆனால், இன்று இஸ்லாத்திற்கு முரணான இந்து சமயத் தாக்கத்தின் காரணத்தால் தோற்றுவிக்கப்பட்ட சடங்கு-சம்பிரதாயங்களை அகற்றுவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.
ஒரு கவிஞன் கூறும் போது;
“சடங்கு-சம்பிரதாயங்கள் சட்டைகளாகவே சமூகத்தில் அணியப் பட்டன! காலப்போக்கில் அவை அட்டைகளாக மாறி, இரத்தம் குடிக்கக் கற்றுக் கொண்டன!” என்று கூறிய கூற்று சமூகத்தின் நிதர்சன நிலையாகி விட்டது.
அந்நியர்களைப் பின்பற்றுவது எமது சிந்தனையிலும், நடத்தையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, இது குறித்து நாம் விழிப்பாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள். (நாம் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2180)
மேற்படி வசனமும், ஹதீஸும் அந்நியர்களைப் பின்பற்ற முற்படுவது மார்க்கத்திலில்லாத பல வழிபாடுகள் உருவாவதற்கும், சமூகங்களின் அழிவுக்கும் காரணமாக அமையுமென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
பனூ இஸ்ராயீலர்கள் காஃபிர்களைப் பார்த்து விட்டு, அவர்களுக்குப் பல சிலைகளிருப்பது போல் கண்ணால் பார்த்து வணங்கப்படுவதற்கு எமக்கும் ஒரு சிலையிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
இவ்வாறே, புதிதாக இஸ்லாத்தையேற்ற சில நபித் தோழர்கள் காஃபிர்களுக்கு இருப்பது போல் எமக்கும் பறக்கத் பெற ஒரு மரமிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
அவர்களது இந்தத் தவறான கேள்விக்குக் காஃபிர்கள் போன்று எம்மிடமும் ஏதாவது இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் காரணமாக இருந்தது.
இதே எண்ணம்தான் மீலாது-மவ்லீது, கத்தம்-கந்தூரி போன்ற விழாக்களையும், கப்று வழிபாடு, உருவ வழிபாடு, கொடி வழிபாடு போன்ற ஷிர்க்குகளையும் இந்தச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (எமக்கு முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர்களையும், நஸாராக் களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “(அவர்களல்லாமல்) வேறு யாரை?” என நபி(ரலி) அவர்கள் கேட்டார்கள். (புகாரி 7320, முஸ்லிம் 2669)
இந்த ஹதீஸ் தவறு செய்வதிலும், ஆதாரத்திற்கு முரணாக நடப்பதிலும் முஸ்லிம்கள் எவ்வளவு தீவிரமாக வழிகெட்ட யஹூதி-நஸ்றானிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, யூத-கிறிஸ்தவ வழிமுறைகளை இஸ்லாமிய ரூபத்தில் முஸ்லிம் சமூகத்தில் நுழைப்பவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஸுன்னாவை ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதில்தான் உறுதியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் சற்றுக் கவனயீனமாக இருந்தாலும், ஷைத்தான் எம்மை வழிகேட்டில் தள்ளி விடுவான் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே, குஃப்ஃபார்களின் வழிமுறைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் அவர்களுக்கொப்பாக நடப்பதற்கும் முற்படக் கூடாது.
“யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே!” (அஹ்மத்) என்ற ஹதீஸைக் கவனத்திற்கொண்டு செயற்படுவோமாக!

அல்லாஹ் நம் அனைவரின் மீதும் நல்லருள் புரிவானாக....
அல்லாஹ் நம் அனைவரையும் சைத்தானின் தூண்டுகோளில் இருந்தும் அவன் விளைவிக்கும் குழப்பங்களிலிருந்தும் பாதுகாப்பானாக....
பித்அத் போன்ற சைத்தானிய செயலிலிருந்தும் நம்மை பதுகாப்பானாக....

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...